குழந்தைகளிடம் பெற்றோர்கள் செய்யக் கூடாத விஷயங்கள்.

 



குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய கலை. பிள்ளைகளுக்கு எப்போதுமே பெற்றோர் தான் முதல் ரோல் மாடலாக அமைகிறார்கள்.
நம்மில் இருந்து வந்த குழந்தை நம்மை பார்த்து தான் உலகை கற்றுக்கொள்கிறது. எனவே பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோரின் அணுகுமுறை மிக முக்கியம்.
குழந்தைகள் எதிர்பாராதவிதமாக ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை கடுமையாகப் பேசுவதோ, கண்டிப்பதோ எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். குழந்தைகளும், அவர்களுடைய செயல்களும் எப்போதும் கணிக்க முடியாததாகவே இருக்கும்.
அப்படித்தான். சில சமயங்களில் உங்கள் குழந்தை நீங்கள் எதிர்பார்க்காத தவறுகளைச் செய்யலாம், சில சமயங்களில் அது எல்லை தாண்டியதாக கூட இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உடனடியாக பெற்றோர்கள் எதிர்வினையாற்றக்கூடாது. உடனே குழந்தையை திட்டுவது, கண்டிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் முன்பாக, இந்த தவறுக்கு நம் பிள்ளையை தண்டிக்க வேண்டுமா என்பதை ஒருமுறை யோசித்து பார்க்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளை பிடிவாதமான நபராக மாற்றக்கூடிய பெற்றோரின் 3 நடவடிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை உங்கள் பிள்ளைகளை செய்த தவறை ஒப்புக்கொண்டு, அதை மாற்றிக்கொள்ளாமல் நான் செய்ததில் எந்த தவறும் இல்லை என பிடிவாதமாக இருக்க வைக்கின்றன.
1. குழந்தைகளை அடிப்பது:
'அடியாத மாடு படியாது' என்ற பழமொழி மாட்டிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஒருபோதும் நீங்கள் பெற்ற பிள்ளைக்கு ஏற்புடையது அல்ல. அடித்தால் குழந்தைகளை சரி செய்துவிட முடியும் என நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. குழந்தைகளை அடித்து வளர்க்க ஆரம்பித்தால், அவர்களிடம் அது அதிக மூர்த்தனத்தை உருவாக்கும். மேலும் கோபம், வெறுப்பு போன்ற குணங்களையும் கொண்டு வரும்.
அடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பொய், ரகசியம் மற்றும் மறைமுகமான நடத்தைகளை குழந்தைகள் செய்ய ஆரம்பிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2. சத்தம் போடுவது:
ஒழுக்கம் என்பது குழந்தைகளிடம் எப்போதும் இருக்க வேண்டியது. எனவே அதை சீராகவும், மெதுவாகவும் பிள்ளைகளிடம் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பொது இடங்களில் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் எது வேண்டுமானாலும் கிடைத்துவிடும் என்றும், நாம் விரும்பிய செயல்களை பெற்றோர் செய்ய அனுமதிப்பார்கள் என்றும் தவறான எண்ணம் தோன்றவே கூடாது.
இது குழந்தையின் நடத்தையில் குழப்பம் மற்றும் கவலையை உருவாக்கும். குழந்தைகளிடம் தேவையில்லாமல் குரலை உயர்த்திக் கத்துவது கூடாது. குழந்தை ஒரு மோசமான விஷயத்தை செய்துவிட்டது என்றால், அதனுடன் பேசி அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்க உதவ வேண்டும்.
3. குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்வது:
குழந்தைகளை அடிப்பது, சத்தம் போடுவது மட்டுமே தவறு, கண்டிப்பாக நடந்து கொண்டால் தவறில்லை என எண்ண வேண்டாம். குழந்தைகளிடம் பேசி புரியவைப்பது என்பது கடினமான ஒன்று. ஏனென்றால் குழந்தைகளுக்கு குறைந்த கவனம் செலுத்தும் திறன் தான் உள்ளது.
தீயை தொட்டால் சுடும் என்றால் குழந்தைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தான், அதற்காக போய் தொட்டுக்கொள் என விட்டுவிடுவோமா?. அதேபோல் தான் ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன்பு ஏன்?, எதற்கு? என விரிவாக விளக்கமளிக்கலாம். குழந்தைகள் திரும்பவும் அதே தவறை செய்தால் கூட பொறுமையாக மீண்டும், மீண்டும் பேசி புரியவைப்பது, அவர்களுடைய ஒழுங்கு நடவடிக்கையை மேம்படுத்தும்.
பகிர்வு
பணி. நிக்கோலாஸ் மாசிடோன் கா. ச

Comments